திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.3 திருவையாறு
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
    மலையான் மகளொடும்
போதொடு நீர்சுமந் தேத்திப்
    புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
    ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
    களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
1
போழிளங் கண்ணிய னானைப்
    பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி
    வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும்
    ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக்
    குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
2
எரிப்பிறைக் கண்ணியி னானை
    யேந்திழை யாளொடும் பாடி
முரித்த இலயங்க ளிட்டு
    முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி
    ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி
    வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
3
பிறையிளங் கண்ணியி னானைப்
    பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித்
    தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும்
    ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச்
    சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
4
ஏடு மதிக்கண்ணி யானை
    ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங்
    கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற
    ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப்
    பிணைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
5
தண்மதிக் கண்ணிய னானைத்
    தையல்நல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி
    உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற
    ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி
    வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
6
கடிமதிக் கண்ணியி னானைக்
    காரிகை யாலொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும்
    வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான்
    ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதோர் ஏனம்
    இசைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
7
விரும்பு மதிக்கண்ணி யானை
    மெல்லிய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை யெழுந்து
    பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும்
    ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக்
    கலந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
8
முற்பிறைக் கண்ணியி னானை
    மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிற்றுக் கில்லேன்
    பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ
    டையா றடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி
    நாரை வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
9
திங்கள் மதிக்கண்ணி யானைத்
    தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை
    எனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும்
    ஐயா ரடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப்
    பறந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
10
வளர்மதிக் கண்ணியி னானை
    வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததோர் காலங்
    காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ
    டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி
    ஏறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
    கண்டறி யாதன கண்டேன்.
11
இந்தத் தலமே கயிலாயமாக இறைவன் காட்டியருளியபோது ஓதியருளியது.
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.13 திருவையாறு
விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்
இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகேட் டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
1
செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
2
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
3
ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
4
சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
5
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
6
கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
7
மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
8
முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங்கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
9
கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.38 திருவையாறு
கங்கையைச் சடையுள் வைத்தார்
    கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்
    திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
    மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்
    ஐயனை யாற னாரே.
1
பொடிதனைப் பூச வைத்தார்
    பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்
    காலனைக் காலில் வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை
    மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார்
    ஐயனை யாற னாரே.
2
உடைதரு கீளும் வைத்தார்
    உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்
    பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்
    வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார்
    ஐயனை யாற னாரே.
3
தொண்டர்கள் தொழவும் வைத்தார்
    தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்
    எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை
    மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும்
    ஐயனை யாற னாரே.
4
வானவர் வணங்க வைத்தார்
    வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்
    காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார்
    ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்
    ஐயனை யாற னாரே.
5
சங்கணி குழையும் வைத்தார்
    சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்
    விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குழலும் பகலும் வைத்தார்
    கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார்
    ஐயனை யாற னாரே.
6
பத்தர்கட் கருளும் வைத்தார்
    பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்
    சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்
    முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்
    ஐயனை யாற னாரே.
7
ஏறுகந் தேற வைத்தார்
    இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்
    நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை யாகம் வைத்தார்
    கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்
    ஐயனை யாற னாரே.
8
பூதங்கள் பலவும் வைத்தார்
    பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்
    கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்
    பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்
    ஐயனை யாற னாரே.
9
இரப்பவர்க் கீய வைத்தார்
    ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங்
    கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
    படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
    ஐயனை யாற னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.39 திருவையாறு
பண் - கொல்லி
குண்டனாய்ச் சமண ரோடே
    கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ
    தூநெறி யாகி நின்ற
அண்டனே அமரர் ஏறே
    திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுதுன் பாதஞ்
    சொல்லிநான் திரிகின் றேனே.
1
பீலிகை இடுக்கி நாளும்
    பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல
    மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி ஏத்துந்
    திருவையா றமர்ந்த தேனோ
டாலியா எழுந்த நெஞ்சம்
    அழகிதா எழுந்த வாறே.
2
தட்டிடு சமண ரோடே
    தருக்கிநான் தவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே
    உம்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத்
    திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடும் உள்ளத் தீரே
    உம்மைநான் உகந்திட் டேனே.
3
பாசிப்பல் மாசு மெய்யர்
    பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை
    நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந்
    திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார்
    வல்வினை மாயு மன்றே.
4
கடுப்பொடி யட்டி மெய்யிற்
    கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே
    மதியிலி பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயுந்
    திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே
    அருந்தவஞ் செய்த வாறே.
5
துறவியென் றவம தோரேன்
    சொல்லிய செலவு செய்து
உறவினால் அமண ரோடும்
    உணர்விலேன் உணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த
    திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன்
    மதியுனக் கடைந்த வாறே.
6
பல்லுரைச் சமண ரோடே
    பலபல கால மெல்லாஞ்
சொல்லிய செலவு செய்தேன்
    சோர்வனான் நினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத்
    திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லாம்
    நினைந்தபோ தினிய வாறே.
7
மண்ணுளார் விண்ணு ளாரும்
    வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமண ரோடே
    இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண்ணிலா எறிக்குஞ் சென்னித்
    திருவையா றமர்ந்த தேனை
கண்ணினாற் காணப் பெற்றுக்
    கருதிற்றே முடிந்த வாறே.
8
குருந்தம தொசித்த மாலுங்
    குலமலர் மேவி னானுந்
திருந்துநற் றிருவ டியுந்
    திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந்
    திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே
    பொய்வினை மாயு மன்றே.
9
அறிவிலா அரக்க னோடி
    அருவரை எடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு
    மூதறி வாளன் நோக்கி
நிறுவினான் சிறுவி ரலால்
    நெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள் செய்தான்
    திருவையா றமர்ந்த தேனே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.40 திருவையாறு
தானலா துலக மில்லை
    சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை
    கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை
    வார்குழல் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை
    ஐயனை யாற னார்க்கே.
1
ஆலலால் இருக்கை இல்லை
    அருந்தவ முனிவர்க் கன்று
நூலலால் நொடிவ தில்லை
    நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி
    மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுத மில்லை
    ஐயனை யாற னார்க்கே.
2
நரிபுரி சுடலை தன்னில்
    நடமலால் நவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந்
    துணையலால் இருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத்
    தெளிவலால் அருளு மில்லை
அரிபுரி மலர்கொண் டேத்தும்
    ஐயனை யாற னார்க்கே.
3
தொண்டலாற் றுணையு மில்லை
    தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை
    கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப்
    பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்கள் ஏத்தும்
    ஐயனை யாற னார்க்கே.
4
எரியலா லுரவ மில்லை
    ஏறலால் ஏற லில்லை
கரியலாற் போர்வை யில்லை
    காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப்
    பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை
    ஐயனை யாற னார்க்கே.
5
என்பலாற் கலனு மில்லை
    எருதலா லூர்வ தில்லை
புன்புலால் நாறு காட்டிற்
    பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித்
    தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை
    ஐயனை யாற னார்க்கே.
6
கீளலால் உடையு மில்லை
    கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை
    தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட
    வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை
    ஐயனை யாற னார்க்கே.
7
சகமலா தடிமை யில்லை
    தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையான்
    நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க
    முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை
    ஐயனை யாற னார்க்கே.
8
உமையலா துரவ மில்லை
    உலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர்
    நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக்
    கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா அருள் கொடுப்பார்
    ஐயனை யாற னார்க்கே.
9
மலையலா லிருக்கை யில்லை
    மதித்திடா அரக்கன் றன்னைத்
தலையலால் நெரித்த தில்லை
    தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ
    நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னும்
    ஐயனை யாற னார்க்கே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.91 திருவையாறு - திருவிருத்தம்
குறுவித்த வாகுற்ற நோய்வினை
    காட்டிக் குறுவித்தநோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை
    தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்த வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
செறிவித்த வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே.
1
கூர்வித்த வாகுற்ற நோய்வினை
    காட்டியுங் கூர்வித்தநோய்
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை
    தீர்ப்பான் உகந்தருளி
ஆர்வித்த வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே.
2
தாக்கின வாசல மேவினை
    காட்டியுந் தண்டித்தநோய்
நீக்கின வாநெடு நீரினின்
    றோ நினைந்தருளி
ஆக்கின வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே.
3
தருக்கின நான்றக வின்றியு
    மோடச் சலமதனால்
நெருக்கின வாநெடு நீரினின்
    றோ நினைந்தருளி
உருக்கின வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
பெருக்கின வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே.
4
இழிவித்த வாறிட்ட நோய்வினை
    காட்டி இடர்ப்படுத்துக்
கழிவித்த வாகட்ட நோய்வினை
    தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்த வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே.
5
இடைவித்த வாறிட்ட நோய்வினை
    காட்டி இடர்ப்படுத்து
உடைவித்த வாறுற்ற நோய்வினை
    தீர்ப்பான் உகந்தருளி
அடைவித்த வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே.
6
படக்கின வாபட நின்றுபன்
    னாளும் படக்கினநோய்
அடக்கின வாறது வன்றியுந்
    தீவினை பாவமெல்லாம்
அடக்கின வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
தொடக்கின வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே.
7
மறப்பித்த வாவல்லை நோய்வினை
    காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை
    தீர்ப்பான் உகந்தருளி
இறப்பித்த வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே.
8
துயக்கின வாதுக்க நோய்வினை
    காட்டி துயக்கினநோய்
இயக்கின வாறிட்ட நோய்வினை
    தீர்ப்பான் இசைந்தருளி
அயக்கின வாறடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே.
9
கறுத்துமிட் டார்கண்டங் கங்கை
    சடைமேற் கரந்தருளி
இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை
    தன்னை இருபதுதோள்
அறுத்துமிட் டாரடி யேனைஐ
    யாறன் அடிமைக்களே
பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன்
    பொன்னடிக் கீழெனையே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.92 திருவையாறு - திருவிருத்தம்
சிந்திப் பரியன சிந்திப்
    பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி
    கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை
    தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ
    யாறன் அடித்தலமே.
1
இழித்தன ஏழேழ் பிறப்பும்
    அறுத்தன என்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை
    யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி
    வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன ஆறங்க மானஐ
    யாறன் அடித்தலமே.
2
மணிநிற மொப்பன பொன்னிற
    மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப்
    பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித்
    தொடர்ந்து விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை
    யாறன் அடித்தலமே.
3
இருள்தரு துன்பப் படல
    மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருள்தரு கண்ணிழந் துண்பொருள்
    நாடிப் புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக்
    கொடுநல கக்குழிநின்
றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ
    யாறன் அடித்தலமே.
4
எழுவாய் இறுவாய் இலாதன
    வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவன மாவன
    மாநர கக்குழிவாய்
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன
    மீட்பன மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கஐ
    யாறன் அடித்தலமே.
5
துன்பக் கடலிடைத் தோணித்
    தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந்
    திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி
    செய்யுமப் பொய்பொருந்தா
அன்பர்க் கணியன காண்கஐ
    யாறன் அடித்தலமே.
6
களித்துக் கலந்ததோர் காதற்
    கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் நின்றவிப்
    பத்தரைக் கோதில்செந்தேன்
தெளித்துச் சுவையமு தூட்டி
    யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ
    யாறன் அடித்தலமே.
7
திருத்திக் கருத்தினைச் செவ்வே
    நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத்
    தோச்சி மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு
    விண்பட் டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ
    யாறன் அடித்தலமே.
8
பாடும் பறண்டையு மாந்தையு
    மார்ப்பப் பரந்துபல்பேய்க்
கூடி முழவக் குவிகவிழ்
    கொட்டக் குறநரிகள்
நீடுங் குழல்செய்ய வையம்
    நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கஐ
    யாறன் அடித்தலமே.
9
நின்போல் அமரர்கள் நீண்முடி
    சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந்
    தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட
    இலையும் முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ
    யாறன் அடித்தலமே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.93 திருவையாறு - திருவிருத்தம்
மலையார் மடந்தை மனத்தன
    வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர்
    மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன
    பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்றி சூழ்ந்தஐ
    யாறன் அடித்தலமே.
1
பொலம்புண் டரீகப் புதுமலர்
    போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை
    யாவன பொன்னனைய
சிலம்புஞ் செறிபா டகமுஞ்
    செழுங்கிண் கிணித்திரளும்
அலம்பும் திருவடி காண்கஐ
    யாறன் அடித்தலமே.
2
உற்றா ரிலாதார்க் குறுதுணை
    யாவன ஓதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை
    யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி
    வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கஐ
    யாறன் அடித்தலமே.
3
வானைக் கடந்தண்டத் தப்பால்
    மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள்
    செய்வன உத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே
    யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கஐ
    யாறன் அடித்தலமே.
4
மாதர மானில மாவன
    வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு
    வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன
    துன்பறத் தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கஐ
    யாறன் அடித்தலமே.
5
பேணித் தொழுமவர் பொன்னுல
    காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக்
    கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம்
    போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்கும்ஐ
    யாறன் அடித்தலமே.
6
ஓதிய ஞானமும் ஞானப்
    பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு
    மாவன விண்ணுமண்ணுஞ்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு
    மொப்பன தூமதியோ
டாதியும் அந்தமு மானஐ
    யாறன் அடித்தலமே.
7
சுணங்கு முகத்துத் துணைமுலைப்
    பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார்
    வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும்
    பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ
    யாறன் அடித்தலமே.
8
சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்
    போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்று நீங்காப்
    பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ
    கால வனங்கடந்த
அழலார் ஒளியன காண்கஐ
    யாறன் அடித்தலமே.
9
வலியான் றலைபத்தும் வாய்விட்
    டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை
    யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன்
    னாளும் பலர்இகழ
அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ
    யாறன் அடித்தலமே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.99 திருவையாறு - திருவிருத்தம்
அந்திவட் டத்திங்கட் கண்ணியன்
    ஐயா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின்
    றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை
    யலம்பச் சிறிதலர்ந்த
நற்திவட் டத்தொடு கொன்றை
    வளாவிய நம்பனையே.
1
பாடகக் கால்கழற் கால்பரி
    திக்கதி ருக்கவந்தி
நாடகக் கால்நங்கை முன்செங்கண்
    ஏனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங்
    காலெங்க ணாய்நின்றகால்
ஆடகக் காலரி மான்றேர்
வலவன்ஐ யாற்றனவே.
2
இப்பதிகத்தில் மூன்றாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
3
இப்பதிகத்தில் நான்காம் செய்யுள் சிதைந்து போயிற்று.
4
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com